Thursday, October 19, 2017

அர்ச்சகர் நலனும் அரசின் கடமையும்

எண்ணில் ஆகமம் இயம்பிய  இறைவர் , தாம் விரும்பும்                        உண்மையாவது பூசனை என உரைத்து அருள ,                                              அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்                                      பெண்ணில் நல்லவள் ஆயின பெரும் தவக் கொழுந்து.
                                                                                   - பெரிய புராணம்                                                
    மக்கள்  தொகையில் எந்தெந்தப் பிரிவில்  எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கு எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் சார்ந்த மதம்,மொழி, இனம் ,செய்யும் தொழில் ஆகிய பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதனால் மக்களின் வளர்ச்சியைக்  கண்காணி ப்பதற்கு  எளிதாகிறது என்று கொள்வோம். ஒவ்வொரு குடிமகனும் முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததைவிடப் பொருளாதார நிலையில் முன்னேறியிருக்கிறாறா   என்பதை நோக்கும்போது  நாட்டின் முன்னேற்றமும் அறியப்படுகிறது. ஒருக்கால் ஏதோ காரணத்தால்  பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களது முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுவது அரசின் கடமை ஆகும். 

 தமிழகத்தைப் பொறுத்தவரைப்  பல்லாண்டுகளாக மேற்கண்ட சமநோக்கோடு செயல் படாமல் இருக்கக் காரணம் அவ்வாறு செயல் படுத்த விடாமல் எதிர்ப்பவர்களே. எந்தப்பலனும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் விளையாதபோது அரசாங்கம் வீண் செலவு செய்வதாகவே தோன்றுகிறது. பொருளாதாரத்தில் முன்னேறாவிட்டாலும் பரவாயில்லை. பின் நோக்கிப் போகும் அர்ச்சகர் சமுதாயத்தின் மீது சிறிதும் இரக்கம் காட்டாதது என்? எதற்கெடுத்தாலும் மதச் சாயமும் சாதிச் சாயமும் இன்னும் எத்தனை காலம் தான் பூசப்போகிறார்கள்? தமிழக மக்கள் தொகையில் சுமார் ஒன்று அல்லது இரண்டு சத வீதமே இருக்கும் பிரிவினர்  சிறுபான்மையர் என்று கருதப்படாவிட்டாலும் புறக்கணிக்கப்பட்டவர் என்றாவது கருதப்படலாம் அல்லவா?  

பொருளாதாரத்தை வேண்டுமானால் விட்டுத்தள்ளுங்கள். அந்தப்பிரிவே இல்லாமல் போய் விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரிய கோயில்களில்  தட்டில் விழும் காசுகளைப் பார்த்தே பழக்கப்பட்ட பொறாமையாளர்கள், மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கிராமங்களில் அல்லல் படுபவர்களை  ஏன் காண்பதில்லை? எல்லோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பவர்கள் இது போன்ற வருமானம் இல்லாத கோயில்களில் எத்தனை நாட்கள் பணியாற்ற முடியும்? வீம்புக்காக வேண்டுமானால் எது வேண்டுமானாலும் பேசலாம். செய்து பார்த்தால் அதன் அருமையும் சிரமங்களும் புரிய வரும். 

விரக்தியின் விளிம்பில் இருக்கும் அர்ச்சகர் சமூகம், குலத் தொழிலை இன்னமும் செய்தால் ஆதரிப்பார் இல்லை எனக் கருதி, வேறு வேலைக்குச் செல்ல எத்தனிக்கிறது. வேலைக்குச் செல்லும் அர்ச்சகர் குலப் பெண்கள்,தாங்கள் மணக்க இருக்கும் தங்களது குல ஆடவர்கள் கோயில் வேலை செய்பவராக இருந்தால் துயரங்கள் தொடரும் எனக் கருதத் துவங்கிவிட்டதால் ஆண்களுக்குத் திருமணம் ஆகாமல் காலம் பூராவும் பிரமச்சாரிகளாக இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. இதற்கு அரசாங்கமும் மடாலயங்களும் தீர்வு காணக் கடமைப் பட்டவர்கள். ஆனால், அவர்களோ அறிக்கை விட்டு விட்டு அமைதி ஆகி விடுகிறார்கள். தமது நிர்வாகத்திற்குட்பட்ட ஆலயங்களின் அர்ச்சகர்களுக்குப் போதிய வருவாய் அமைத்துத் தந்து அறநிலையத்துறையும் அவ்வாறே செய்வதற்கு முன் உதாரணமாகத் திகழலாமே! 

அர்ச்சகர் நலனைக் காப்பதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானா அரசுகள் சீரிய திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அர்ச்சகர் தொழிலைச் செய்து வரும் ஆண்களை, அக்குலப்பெண்கள் மணக்க முன்வந்தால் அவ்விருவருக்கும் மூன்று லக்ஷ ரூபாய் நிதி உதவியும் திருமணச் செலவுக்கு  ஒரு லக்ஷமும் தருவதாகத் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர்களும் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அடுத்த மாதம் முதல் பெறுவர் என்ற அறிவிப்பு அச்சமூகத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தர வல்லதாகும். அது  மட்டுமல்ல. எப்போதெல்லாம் அரசு ஊழியர்கள்  சம்பள உயர்வு பெறுவார்களோ அப்போதெல்லாம் அர்ச்சகர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போது கேட்கலாம். இது போன்ற நலத்திட்டங்களைத்  தமிழக அரசு வழங்காதது ஏன் என்று. அறிவிப்பதால் அடுத்த தேர்தலில் பலன் இருக்குமா என்றுதான் யோசிக்கிறார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. மக்கள் தொகையில் மிகச் சொற்ப சதவீதமே இருப்பவர்களால் வெற்றி- தோல்வியை  நிர்ணயிக்க முடியாது என்ற பட்சத்தில் அவர்களுக்கு இரக்கப்படுவதற்குப் பதிலாக, நிச்சயம் வோட்டு கிடைக்கும் பிரிவுக்கு வாரி வழங்குவதே வெற்றி தர வல்லது என்ற கணிப்பே மேலோங்குகிறது. உண்மைதான். அர்ச்சக சமூகத்திற்கு உதவும் அரசு பிரதி பலனை எதிர்பாராது சேவையாகக் கருதினால் மட்டுமே அக்குலம் வாழ முடியும். இல்லாவிட்டால் ஆந்திரத்தையும் தெலுங்கானாவையும் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.