Monday, November 26, 2018

ஆதி சைவர் நலன்

ஆச்சார்யாபிஷேகம் 
மதிப்பிற்குரிய சிவாச்சாரியப் பெருமக்களுக்கும் அவர்கள் நலனில் ஈடுபட்டுள்ள சிலருக்கு மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்படும் பதிவு இது. ஆகவே இதனை உரியவர்களுக்கு மட்டுமே பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

ஆதி சைவர்கள் என்றும் முப்போதும் திருமேனி தீண்டுவார் என்றும் அழைக்கப்படும் இச்சமூகம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நன்மை தீமை முழுதும் அவரவர் வினை வழியே நடைபெறும் என்பதில்  யாருமே விதி விலக்கு அல்ல. சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றிய ஆகம வழிப்படி பூஜைகள் நடைபெறாததற்கு ஆயிரம் காரணம்   இருக்கலாம். ஆனால் அடிப்படையான சிரத்தையே குறைவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும் ? .

சிவபுரம் கும்பாபிஷேகம் 
நித்திய கர்மானுஷ்டானங்கள்,  ஆகம பாடசாலைக் கல்வி, தீக்ஷை, ஆச்சார்ய அபிஷேகம், ஆத்மபூஜை  ஆகியவற்றைக் கடைபிடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூஜை உரிமை ஆதி சைவருக்கே என்பதைப்  பிறகு எந்த வழியில் நிலை நாட்ட முடியும் ? ஆசார லோபத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கே இல்லை. இவ்வளவு லோபங்களுக்கு இடையில் பெருமானது சாந்நித்தியம் எப்படி ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தில் இருக்கும் என்பதை யோசிக்க வேண்டாமா ? 

ஆகம பாட சாலை நிறுவிப் பெயரும் பணமும் சம்பாதித்து விட்டால் நித்திய பரார்த்த  பூஜை என்கிற கடமையே மறந்து போகிறது. வெளி நாட்டுப் பயணங்கள் இருக்கவே இருக்கிறது.  அப்படிப் பட்டவர்கள் கும்பாபிஷேகம் செய்து  வைக்கப் போனாலோ, மைக்கையும், வீடியோவையுமே நாடுகிறார்கள். ஹோம குண்டங்களில் அமர்ந்துள்ள எத்தனை பேர் யாகசாலை மந்திரங்களில் அக்கறை காட்டுகிறார்கள்? கும்பாபிஷேகம் முடிந்தவுடன் சம்பாவனையை வாங்கிக்கொண்டு சாப்பிடப்போகும் பலருக்கு ,மகாபிஷேகத்திலோ, யாகசாலையில் செய்யப்படும் உபசாரங்களிலோ  சிரத்தை இல்லாமல் போனது ஏன் என்று யாராவது விளக்க முடியுமா ? 

நன்றி: வலைத்தளத்தில் வெளியிட்டவருக்கு 
ஒரு கும்பாபிஷேகம் என்றால் ஏறத்தாழ இருபது சிவாச்சார்யர்கள் வந்து நடத்தி வைக்கிறார்கள். அந்த வருகையைத்  தங்கள் குடும்ப நலனுக்காகவும் பயன் படுத்திக்கொள்ளலாம் அல்லவா? தமது வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை ஆங்கிலக் கல்வி கற்க வைத்து, வேலைக்கும் அனுப்பி விடத் துடிக்கிறார்கள் பலர். பிற்காலத்தில் கோயில் பூஜை எக்கேடு கெட்டால் என்ன என்று இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும். வேலைக்குச் சென்று விட்ட இவர்கள் வீட்டுப் பெண்கள் கை நிறைய சம்பாதிக்கும் போது கோயில் பூஜை செய்யும் பையனைத்  திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள். வேதம் கற்கும் மாணவர்களுக்கும் இதே நிலைதான். 

கும்பாபிஷேக யாகசாலை 
பல ஊர்களில் மேற்படி காரணத்தால் பல ஆதிசைவ குலப் பையன்களுக்குத் திருமணம் ஆகாமல் போ ய் விடுவதைப் பார்க்கிறோம். பெண்கள் மட்டுமல்ல. அப்பெண்களைப் பெற்றோர்களும் சிவ பூஜைகள் தொடரமுடியாதபடித் தவறிழைக்கிறார்கள். அதிலும் கிராமக் கோயில்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

இந்நிலையில் கும்பாபிஷேகத்தின் போது ஒன்று சேரும் சிவாசார்யர்கள் அங்கு வந்துள்ள தமது சமூகத்தினரிடையே ஜாதக பரிவர்த்தனை செய்து கொள்ளலாமே! அதெல்லாம் செய்யாமல் மறு நிமிடமே ஏன் பறந்து விடத் துடிக்க வேண்டும் ? 

வருமானம் இல்லாமல் சிரமப்படுவது உண்மை தான். ஆனால் உண்மையாகத் தொண்டு  செய்யும்  பூஜகர்களுக்கு உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள அன்பர்கள் உதவிக் கரம் நீட்டத் தயாராக இருக்கிறார்கள். " என்னோடு போகட்டும் " என்று இருப்பவர்களை மட்டும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல, எனது பெண்ணை யாருக்குத்  திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். யாரும் சொல்லத் தேவை இல்லை என்று இருப்பவர்களையும் ஒன்றும் செய்வதற்கில்லை. அவரவர் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியது தான். 

ஒருங்கிணைக்கும் நல்லுள்ளம் கொண்ட சிவாசார்யர்களாவது முயற்சி செய்வது நல்லது. உலகை வலம்  வந்துகொண்டு பொன்னாடைகள் போர்த்திக் கொள்பவர்கள் முன் வரப் போவதில்லை. அவர்கள் வேண்டுமளவு பணம் சம்பாதித்து ஆகி விட்டது.  குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், சிவாலயங்களில் பூஜை செய்வது நமது கடமை என்ற எண்ணம் இருப்பவர்கள் மட்டுமே முன்வர முடியும். அரசாங்கத்தையும் பிற மனிதர்களையும் நம்பிக் கையேந்துவதை விட நமது குல தெய்வமான பரமேச்வரனே நமக்குக் கதி என்று எண்ணுபவர்களை இன்றளவும் சுவாமி கை விடாமல் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார். இதை வாய் விட்டுப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் பூஜகர்களை நாம் சந்தித்திருக்கிறோம். 

சமூகம் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு பூஜகரும் நினைவில் வைக்க வேண்டி உள்ளது. அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளும், பாவச் செயல்களும் மக்களாலும் மகேசனாலும் கண்காணிக்கப் படுகின்றன. நமக்கு ஒழுக்கம்,ஆசாரம், நியமம், சிரத்தை ஆகியவை நாள்தோறும் வளர வேண்டும் என்று மனமார பிரார்த்தித்துக் கொண்டு ஒரு வில்வத்தை சுவாமி மீது சார்த்தினால் போதும். மற்றவற்றை அவன் பார்த்துக் கொள்வான். புகழ்த்துணை நாயனாராகிய ஆதி சைவருக்கு நித்தலும் படிக்காசு வைத்த பரமன், தன்னை நாள்தோறும் காலம் தவறாமல் நியமத்தோடு பூஜிப்பவனை எப்படிக் கைவிடுவான்? காப்பது அவன் கடமை ஆகி விடும் அல்லவா ?