Friday, July 26, 2019

ஆசை வலையில் அகப்படலாமா


ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் முக்கியம் என்றாலும் சமுதாயம் இதனை அந்தணரிடம் மிக உன்னிப்பாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. உலக நன்மைக்காக அனுதினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய கடமை அந்தணர்களுக்கு உண்டு. ஆத்மார்த்த பூஜை, ஜபம் என்பதோடு பரார்த்த பூஜையானது ஆதி சைவர்களால் சிவாலயங்களில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பட்டாச்சார்யார்களும் விஷ்ணு கோயில்களில் பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒழுக்க சீலர்கள் எனவும், தவறான காரியங்களை மறந்தும் செய்ய மாட்டார்கள் என்றும் இந்த சமூகம் இன்றும் உறுதியாக நம்புகிறது.

ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்குவார் என்று தில்லை வாழ் அந்தணர்களைச் சிறப்பிக்கிறார் சேக்கிழார். அதாவது, திருவோடும், செம்பொன்னாலாகிய பொருளும் அவர்களைப் பொறுத்தவரை ஒன்றுதான் என்பது கருத்து. சில வருடங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை தனது ஆட்சிக்குக் கொண்டு வந்தவுடன் உண்டியல்களை நிறுவினார்கள். உயர்நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் கோயில் மீண்டும் தீக்ஷிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதுவரை உண்டியலில் இடப்பட்ட காணிக்கைகளை தீக்ஷிதர்கள்  அரசுக்கே திருப்பிக் கொடுத்தனர் என்று பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். கோயிலும் முன்போலவே உண்டியல் இன்றி சிறப்பாக இயங்குகிறது.

அண்மைக்காலமாகவே கோயில்களில் களவு போகும்போதெல்லாம் அர்ச்சகருக்குத் தெரியாமல் எவ்வாறு சாத்தியம் ஆகும் என்றெல்லாம் அவதூறுகளைக் கிளப்பி விட்டனர். நல்ல வேளையாக அர்ச்சகர்கள் யாரும் இந்த குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர்.
ஊடகங்கள் திரித்துப் பொய்யாக்கிய செய்திகள் உலா வரும் வேளையில் அர்ச்சகர் உள்ளிட்ட அந்தணர் சமூகம் மேலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது. தவறு எங்கேயாவது நடந்தால் மொத்த சமூகத்தின் மூலம் பழி சுமத்தி விடலாம் என்று கழுகுகள் வட்டமிட்டுக் காத்துக் கொண்டு இருக்கின்றன. அர்ச்சகர்களும் மற்றவர்களைப் போலவே ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்கள் என்று யாரும் கூறப்போவதில்லை. சமூக வலைத்தளங்களிலும் மிகுந்த எச்சரிக்கையோடு செயல் பட வேண்டிய தருணம் இது. சொந்த விஷயங்களைப் பகிர்வதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை. அனுதினமும் சுவாமியைத் தொட்டு பூஜிக்கும் கரங்கள் சுத்தமாகவும்,புனிதமாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

கோயிலுக்குள் நுழையும்போதே அர்ச்சகருக்குப் பயம் கலந்த பக்தியும், ஆசாரமும்,எளிமையும், பொறுப்பும், பக்தர்களிடம் அன்பும் கூடவே வர வேண்டும். அதனால் தான் சுந்தரரும்.” முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் “ என்று பாடினார். இப்படி இருந்தால்  ஆலயத்தில் நடக்கும் குற்றங்களை அர்ச்சகர் மீது வீணாகச் சுமத்த அஞ்சுவார்கள். ஆனால்,சிரத்தை குறைவு, அனாசாரம்,அலட்சியம், அகந்தை, பணத்தாசை ஆகியவை மேலோங்கும்போது இதுபோன்ற பழிகளுக்கு ஆளாக நேரிடும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவர சுவாமி ஆலயத்தில் உண்டியலை மாற்றுச் சாவி மூலம் திறந்து அர்ச்சகர்கள் இருவர் திருடியதாகத் தொலைக் காட்சி ஒன்றில் காட்டப்பட்டுள்ளது.இத்தகவல் அதிர்ச்சியையும் தாங்க முடியாத வேதனையையும் தருகிறது. காமிராவில் பதிவானதையும் கூடவே காட்டினார்கள். பிடிக்கப்பட்ட இரு அர்ச்சகர்களையும் காட்டி, அவர்கள் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதாகச் செய்தி வெளியானது.
குற்றத்தின் பின்னணியைக் காவல் துறையினர் நிச்சயம் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். எப்படி இருப்பினும் தனக்காகவோ பிறருக்காகவோ இந்தச் செயலை செய்வது சிவத் துரோகம் அல்லவா? நல்ல வருமானத்தைத் தரும் இக்கோயிலில் இப்படிப்பட்ட பேராசையுடன் அர்ச்சகர்கள் ஈடுபட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.
இதற்காகவே காத்திருக்கும் நாத்திக வாதிகளும், பிராமணத் துவேஷிகளும் கொக்கரிப்பார்கள் என்பதை இவர்கள் அறியாமல் இச்செயலில் ஈடுபடலாமா? “ அப்போது நாங்கள் சொன்னபோது நீங்கள் நம்பவில்லை, இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் “ என்று சவால் விடப் போகிறார்கள். மொத்த அந்தணர் சமுதாயத்தையும் வெட்கித் தலை குனியச் செய்து விட்டது இச் சம்பவம்.

பின் குறிப்பு: இப்பதிவு ஆசிசைவ மற்றும் அந்தணர்களின் பிற பிரிவினர்களுக்கு மட்டுமே எழுதப்பட்டது. இதனைப் பிறரிடம் பகிர்வது நமக்கு மேலும் இழிவைத் தேடித்தரும்.      

No comments:

Post a Comment