Friday, January 12, 2018

அலங்காரமா அறியாமையா ?

இலிங்கப் பெருமானுக்கு  உருவம் 
மூர்த்தி அலங்கார விதி என்ற பழைய புஸ்தகத்தில் எவ்வாறு அலங்காரம் செய்யப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப் பட்டிருக்கிறது. ஆண் விக்கிரகத்தைப் பெண்ணாகவும், மனம் போன போக்கில் எல்லாம் அடியோடு மாற்றி அமைப்பதும் பல கோயில்களில் நடைபெறுகின்றன. சிவாகமத்திற்கு மாறாக நடந்து கொள்வது வருந்தத்தக்கது. அலங்காரம் என்ற பெயரில் கண்ட பொருள்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்சவத் திருமேனிகள் அலங்கரிக்கப்படுகின்றன. பார்ப்பவர்களோ ஒன்றும் தெரியாத அப்பாவிகளாகவும், இப்படிப்பட்ட  " அலங்காரத்தைப் பெரிதும்  மெச்சுபவர்களாகவும் இருப்பதால் கேட்பவரின்றி ,விதம் விதமான  அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு மாற்றுவதால் ஏற்படும் தோஷங்கள் பற்றித் தெரிந்தவர்கள் இப்படி மாற்றத் துணியமாட்டார்கள். 

ஒரு ஊரில் நவராத்திரியின் போது அம்பிகைக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களைப் படம் எடுத்து அனுப்பிஇருந்தார்கள். அம்பிகையை ராஜ ராஜேசுவரியாகவும், திருபுர  சுந்தரியாகவும், சிவ பூஜை செய்பவளாகவும்,தக்ஷிணா மூர்த்தி ரூபிணியாகவும், சரஸ்வதி,லக்ஷ்மி ஆகிய தேவி அம்சங்களாகவும், துர்க்கா தேவியாகவும், காமாக்ஷியாகவும் , மீனாக்ஷியாகவும், அன்னபூரணியாகவும் அலங்காரம் செய்து வருவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் வெண்ணைத் தாழி அலங்காரம் செய்திருந்தார்கள். எழுதிக் கேட்டதற்கு, "  அரியலால் தேவியில்லை" என்ற தேவார வாக்கை சுட்டிக் காட்டினார்கள். அப்படியானால் பத்து நாட்களும் தசாவதாரங்களையும் அம்பிகைக்கு செய்து பார்ப்பார்களோ என்னவோ !!


சிவலிங்க மூர்த்தியாவது உருவமும் அருவமும் கலந்த படியால், அம்மூர்த்திக்கு உருவம் கொடுப்பது உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததன் விளைவு. சந்தனக் காப்பே செய்து விடுகிறார்கள் சில இடங்களில். மேலும், கண்,மூக்கு,வாய் என்ற எல்லாம் பாணத்தில் வரையப் படுகிறது. போதாததற்கு மீசை வேறு ! 


அன்னாபிஷேகம் என்பது அன்னத்தால் அபிஷேகம் செய்யப் படுவது. அன்னம் பாலித்த கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக செய்யப்படுவது. சிதம்பரத்தில் சந்த்ரமௌலீசுவரருக்கு அன்றாடம் செய்யப்படுவது. வித்தியாசமாகச் செய்வதாக எண்ணிக்கொண்டு பல ஊர்களில்  முகம் வரையப்பட்டு , எல்லாப் பொருள்களைக் கொண்டும் " அலங்காரம் " செய்யப்படுகிறது  பாவம் , அலங்காரம் செய்ய எவ்வளவோ முயன்றும், கண் ஒன்றரைக் கண்ணாகவும், விழித்துப் பார்ப்பதாகவும் பயங்கரமாகவும் சில ஆலயங்களில் சித்தரிக்கப்படுகிறது. சிவலிங்கப் பெருமானுக்கும் ,அம்பிகைக்கும்  அர்த்தநாரி வடிவம் கொடுத்து விடுவதையும் பார்க்கிறோம்.  


உற்சவருக்குச்  செய்யப்படும் அலங்காரமோ கற்பனையின் உச்சமாக இருக்கிறது. நிற்கும் விக்கிரகத்தை போலிக் கரங்களையும் கால்களையும் வைத்துக் கயிறுகளால் கட்டி, இயல்பான வடிவம் எது என்று தெரியாதபடி ஆக்கி விடுகிறார்கள். சோமாஸ்கந்த மூர்த்திக்கு நீண்ட கால்களை வைத்துக் கட்டி செயற்கைக் கைகளில் சூலத்தைக் கொடுத்து, மூர்த்தியின் அழகையே கெடுத்து விடுகிறார்கள். தொண்டை மண்டலத்தில் இவ்வித அலங்காரம் சகஜமாகப் போய் விட்டது. அதையும் ரசிப்பவர்கள் உண்டு. உயரத்தில் அமர்ந்திருக்கும் மூர்த்தியின் செயற்கைக் கால்கள் அதிகார நந்தியின் ஏந்திய கரங்கள் வரை நீட்டப்படுகின்றன. 


மூர்த்தியால் நகைக்கு அழகு 
சோழ நாட்டுக் கோயில்களில் பெரும்பாலும் மூர்த்தியின் இயற்கையான வடிவை மாற்ற மாட்டார்கள். கவசம் சார்த்தி, நகைகள்,கிரீடம்,நகைகள், பின் அலங்காரம் ஆகியன மட்டும் செய்து விட்டு, புஷ்ப அலங்காரம் மூர்த்தியை மறைக்காதவாறு செய்வார்கள். அது அவர்களுக்கே உரிய ஆற்றல். மற்ற பகுதிகளில் உள்ள பெரிய கோயில்களில் உற்சவ அம்பாளுக்குத் திருக் கல்யாணத்தின் போது கூட புடவை அணிவிக்காமல், பாவாடை அணிவிப்பதை  என்னவென்று சொல்வது ? 


ஒரு ஊரில்  சுவாமி, அம்பாளுக்குப் பின்னல் பின்னி விடுவதாக உற்சவர்கள் அலங்காரம் செய்யப் பட்டுள்ளனர். இதெல்லாம் ஆகம சம்மதமா, எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம் என்ற எண்ணமா  என்பதை  சிவாச்சாரியப் பெருமக்களின் சிந்தனைக்கு விடுகிறோம்.


சுவாமிக்கு ரூபாய் நோட்டுக்களால் மாலை போடப் போய் இப்பொழுது சன்னதியையே நோட்டுக்களால் அலங்கரிக்கத் துவங்கி விட்டனர். மரத்தை மறைத்தது மா மத யானை என்பதைப் போல் காகிதம் என்பதே மறந்து நோட்டு மட்டுமே தெரிகிறது !! 

இப்பதிவு எவரையும் குறைகூறவோ, புண்படுத்தவோ எழுதப்பட்டதன்று. சிவாசார்யர்களது சிந்தனைக்கு மட்டுமே உரியது என்பதால் பரவலாக எல்லோருக்கும் அனுப்பப்படவில்லை. யாரோ சிலரது  ஆர்வக் கோளாறுகளால் மொத்த சமூகமே பழிக்கப்படக் கூடாது. எனவே இதனை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment