Tuesday, January 16, 2018

நந்தியை மறைப்பதா ?

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவரை பூஜிக்கும் பெண்ணின் நல்லாள் 

சபரி மலை போகும் பக்தர்கள் பலர் கோயில்களில் மாலை போட்டுக் கொள்கிறார்கள். மலைக்குப் போகும்போது கோவிலுக்கு வந்து ஐயப்ப பூஜை செய்து விட்டு இருமுடியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். அண்மையில் ஒரு கோயிலில் கண்டதை இங்குப் பகிர வேண்டியிருக்கிறது. 

துணியால் மறைக்கப்பட்ட நந்தி மண்டபம் 
ராஜ கோபுரத்தைக் கடந்தவுடன் நந்தி மண்டபம், கொடி மரப் பிள்ளையாரை வணங்கி விட்டு, நந்திக்கு நேராக இருக்கும் சிவசன்னதிக்குச் செல்லுகையில்  நந்தி தேவரை மீண்டும் வணங்க எண்ணியபோது நந்தியைப் பார்க்க முடியாத படித் திரை இடப் பட்டிருந்தது. அதற்கு முன்பாக மூலவரை நோக்கிய நிலையில் 18  மரப்படிகள் அமைக்கப் பட்டு, அதன் மீது ஐயப்பன் விக்கிரகம் இருந்ததைக் கண்டோம். பூஜைக்காகச்  செய்யப்பட்ட ஏற்பாடு இது. 

நந்தி போல் மறைக்காதே என்று வேடிக்கையாகச் சொல்வது போய் நந்தியையே மறைத்து விட்டிருக்கிறார்கள்! தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும் சுவாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது என்று ஆலய வழிபாட்டு முறை இருக்கும்போது, நந்தி மண்டபத்தையே இப்படித் துணியால் மூடியது வியப்பில் ஆழ்த்தியது!  சிவாகம முறைப்படி நடக்கும் கோயில்களில் கூட இப்படி விதி மீறல்கள் நடக்கலாமா ? 

மறைப்பும் பூஜை அமைப்பும் விலகியபின் தெரியும் நந்தி 
தகுந்தபடி எடுத்துச் சொன்ன பிறகு படிகளோடு கூடிய பூஜை அமைப்புச் சற்று விலக்கப்பட்டது. நந்தனார் சரித்திரத்தில் இறைவன் நந்தி தேவரைச் சற்று விலகி இருக்கும் படி கூறியருளினார். ஆனால் இங்கு நடைபெற்றதோ வேறு விதமாக இருந்தது. இப்படியெல்லாம் நடை பெறாமல் சிவாச்சாரியப் பெருமக்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். 

பூஜைக்குக்  குடும்பத்துடனும் நண்பர்களுடனும்  வருபவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை உண்டுவிட்டு எஞ்சியவற்றைக் கோயிலிலேயே எறிவது வருத்தமளிப்பதாக உள்ளது. எஞ்சிய  உணவை கோவிலுக்கு வெளியில் ஒரு தொட்டியில் போடாமல், கோவிலுக்கு உள்ளேயே போடுவதால், அதை உண்பதற்காக நாய்கள் வந்து விடுகின்றன. எஞ்சிய இலைகளும், பிளாஸ்டிக் பொருள்களும் சிதறிக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையே மிஞ்சுகிறது. போதாக் குறைக்கு வாய் கொப்பளித்த எச்சில் நீர்  , அங்கு வருபவர்களின் கால்களில்  படுகிறது . 

வீட்டில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் மட்டும் போதாது. வீதிகளையும் நாம் வணங்கும் கடவுளின் ஆலயத்தையும் அவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டாமா? நாம் எப்போது தான் திருந்தப்போகிறோமோ தெரியவில்லை. 

1 comment:

  1. நாம் எப்போது தான் திருந்தப்போகிறோமோ தெரியவில்லை.
    May Swami hear your sincere and anxious plaint and put some sense into future visitors of all our temples. God certainly knows how and when. Let each one of us do our own individual duty consciously.

    ReplyDelete